திங்கள், 5 ஜனவரி, 2015

பள்ளி சாராக் குழந்தைகள் 2015 பேர் உலக சாதனை முயற்சி

விழுப்புரத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் முயற்சியில் பள்ளி சாராக் குழந்தைகள் 2015 பேர் இணைந்து அசிஸ்ட் (உதவும் உலக சாதனையாளர்கள் ஆய்வு நிறுவனம்) உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.
இதில், 15 கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா மைய மாணவிகள், 16 உண்டு உறைவிட சிறப்புப் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் என 2015 பேர் இணைந்து இந்த சாதனையில் ஈடுபட்டனர்.
நிகழ்ச்சியில், அனைவருக்கும் கல்வித் திட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமிநாதன் வரவேற்றார். பயிற்சி ஆட்சியர் பிரபுசங்கர் தலைமை வகித்தார்.
உதவி திட்ட அலுவலர் ராமமூர்த்தி, உதவும் உலக சாதானையாளர்கள் ஆய்வு நிறுவனம் (அசிஸ்ட்) அதிகாரிகள் நிறுவனர் ராஜேந்திரன், செயல் மேலாளர் தமிழன்பன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருள்தாமஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.
இதில், 2015 மாணவர்கள் 15 விதமான சாதனைகளைச் செய்து காட்டினர். இவர்கள் மரம் வளர்ப்பது, தூய்மை இந்தியா திட்டம், எய்ட்ஸ் விழிப்புணர்வு, அனைவருக்கும் கல்வி உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு அட்டைகளை ஏந்தி 2015 நொடிகளில் இச் சாதனையை நிகழ்த்தினர். அதேபோல, 2015 மாணவர்கள், 2015 நொடிகளில் தங்கள் தனித் திறனையும் காட்டினர். பின்னர், இவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
மேலும், 2015-ஆம் ஆண்டை குறிக்கும் வகையில் 2015 மாணவ, மாணவிகள் இந்தியா வடிவில் நின்றிருந்தனர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பாக்கியராஜ், சந்திரசேகர், ஜெயச்சந்திரன், மதிவாணன் உள்பட பலர் பங்கேற்றனர்.