புதன், 25 மே, 2011

மெட்டுப்பாடல்கள்-5

கண்ணோடு கனவு -கலைந்திடும்
கண்ணோடு கனவு!

காதல் ஒரு கனவு இல்லை
கண்ணை விட்டு அது கலைவதில்லை!
*
காதல் உயிர்களை வாட வைக்கும்
வாடும் உயிர்களை வாழ வைக்கும்!

காதல் என்பது பூங்கிளையே
நானும் அதிலே ஓர் இலையே!

கிளைகளிலே வசந்தம் வந்து வாழாதோ?
*
காதல் உயிர்களை தேட வைக்கும்
தேடும் உயிர்களை பாட வைக்கும்!

காதல் என்பது இன்னிசையே
காலம் பாடும் குயில் இசையே!

காதினிலே குயிலும் வந்து கூவாதோ?
*
(குறிப்பு:பொன் மாலைப்பொழுது இது ஒரு பொன் மாலைப்பொழுது என்ற பாடல் மெட்டு)

மெட்டுப்பாடல்கள்-4

நீ முகத்தை திருப்பிக்கொண்டால்
தீ மிதிக்கும் எந்தன் நெஞ்சம்
பூவே நீ அறியாயோ?
புன்னகையும் புரியாயோ?
*
மார்கழி மாதத்திலே
நீயும் இடும் கோலத்திலே
ஓர் பனியின் துளி கூட
சிந்தாமல் குடை விரிப்பேன்!

பாவி எந்தன் நெஞ்சுக்குள்ளே
தாவுகின்ற ஆசைகளை
தேவி உந்தன் காதுக்குள்ளே
ஒவ்வொன்றாய் கடை விரிப்பேன்!
*
பாசிபல படர்ந்திருக்கும்
தாமரைப்பூ குளத்தினிலே
வீசி விட்டு போகும் உந்தன்
முல்லைசரம் சேர்த்து வைப்பேன்!

போதுமான நட்சத்திரம்
என்னிடத்தில் இல்லையென்று
வானம் வந்து கேட்கையிலே
அக்குறையை தீர்த்து வைப்பேன்!
*
(குறிப்பு:வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம் என்ற பாடல் மெட்டு)

மெட்டுப்பாடல்கள்-3

அழகே பேரழகே
உன் அழகு போல் இல்லை வேறழகே!

கண்ணுக்குள்ளே கனவாய் பூத்திடு
கண்கள் கூட விலையாய் கேட்டிடு!

பேரழகே என் பேரழகே
பேரழகே என் பேரழகே
*
வாழ்க்கை இன்று உன்னிடம் அழகே
வார்த்தை ஒன்று சொல்லிடு அழகே
மெல்லிய பூங்காற்று
உன் பேர் சொல்லி ஆனது தாலாட்டு!
நானும் பேர் சொல்ல வரம் தந்திடு
வாழ்வை நான் வெல்ல கரம் தந்திடு!
*
காதல் தந்திடும் காயம் அழகே
காயம் தந்திடும் கண்ணீர் அழகே
நினைவில் நீ இருந்தால்
நெஞ்சோடு ஆயிரம் நீரூற்று!
நாணல் நானாக நதியாகிடு 
கானல் ஆகாமல் எனை சேர்ந்திடு!
*
(குறிப்பு:கண்ணே கலை மானே கன்னி மயிலென கண்டேன் உனை நானே என்ற பாடல் மெட்டு) 

மெட்டுப்பாடல்கள்-2

விதை போல இதயத்தில் விழுந்தாய்
பூங்கொடியே பூங்கொடியே
சதை எங்கும் கிளைகள் பரப்பினாய்
பூங்கொடியே பூங்கொடியே

உன் நெற்றியில் குங்குமம் சரிதான்
உன் புருவத்தில் கண்மையும் சரிதான்
உன் விரல்களில் மருதாணி சரிதான்
உன் உதட்டினில் சாயமும் சரிதான்
ஆனால் யாவும் என்மேல் பூசிப்போனது சரியா?
*
தேவதையே என் தேவதையே
உன் நகங்களை கொண்டு கிழித்து
உன் பற்களை கொண்டு கடித்து
என் உயிரினை அதன்வழி குடித்து 
உன் செல்ல கோபம் வெளிபடுத்து!

உன் கூந்தலில் என்னை சிறை செய் 
அடி நானும் கூடத்தான் இரவு 
உன் வேர்வையில் என்னை கறை செய் 
அடி நானும் கூடத்தான் நிலவு!

நான் கொடுத்து வைத்தவன் 
கொடுத்து வைத்தவன் எடுத்து கொள்ளவா?
சொல் சொல் சொல் 
*
தாமரையே என்  தாமரையே  
சூரியன் எனக்குள்ளே உதிக்கும்
வானவில் வர்ணங்கள் ஜொலிக்கும்
வண்ணத்து பூச்சிகள் பறக்கும்
யாவும் உனைகண்டு நடக்கும்!

ஒரு விழி என்னை அழைத்து 
விருந்தினை உண்ண சொல்லும் 
மறுவிழி அதனை மறுத்து 
மருந்தினை உண்ண சொல்லும்!

நான் விருந்து உண்பதா?
மருந்து உண்பதா? உந்தன் முடிவென்ன?
சொல் சொல் சொல் 
*
(குறிப்பு:உன்னைத்தான் குயிலும் தேடுது குக்குக்கூ...குக்குக்கூ...என்ற பாடல் மெட்டு)

செவ்வாய், 24 மே, 2011

மெட்டுப்பாடல்கள்-1

என்னவென்று சொல்ல -நினைவுகள்
கழுத்தை நெரித்து கொல்ல!
விழிகள் பிதுங்கி நிற்கிறேன்-அடியே
மொழிகள் தொலைந்து நிற்கிறேன்!
என்னை இழந்து நிற்கிறேன்-அதிலே
உன்னை சுமந்து நிற்கிறேன்!
*
நிலவு இரவுகளில் உலவும் தென்றல் அது
உந்தன் பெயரை சொல்லி பாடுதே!
ஓரப்பார்வைகளில் ஈர மல்லிகைகள்
எந்தன் நெஞ்சில் மலர்ந்தாடுதே!

இதய ஏடுகளில் எண்ண தூரிகைகள்
உன்னை உன்னை படம் போடுதே!
உயிரை உருக்கும் உந்தன் மார்பின் வெப்பம் அது
என்னை என்னை புடம் போடுதே!

மலர்க்கரம் தன்னில் முகத்தினை ஏந்து
மாறுதல் நிகழ்ந்து விடும்!
மறுகணம் என்னில் துன்பங்கள் தொலைந்து
ஆறுதல் தவழ்ந்து வரும்!
*
மாமரக் கிளைகளில் மரத்தின் இலைகளில்
மறைந்த கிளியை நெஞ்சம் தேடுதே!
காற்றில் கலந்து வரும் கிளியின் மொழிகள் அதை
கேட்டு கேட்டு கண்கள் மூடுதே!

ஆதிகாலம் தொட்டு சூரிய காந்தி மொட்டு
கிழக்கு முகத்தை தினம் நாடுதே!
ஆயினும் அது ஒரு ஆகாத தவறென
வழக்கு நடக்க மனம் வாடுதே!

முன்பனி காலத்தில் முழுமதி நேரத்தில்
முத்தமிட்ட நாட்கள் எங்கே?
யாரது இந்த வேளையில் என்று
சத்தமிட்ட ஆட்கள் எங்கே?
*
(குறிப்பு:எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை என்ற பாடல் மெட்டு )

ஞாயிறு, 22 மே, 2011

கடைசிக்கடிதம்!

அன்பே சொல்...
எப்போதிலிருந்து
துவங்கியது-
நம் பிரிவுக்கான மௌனம்?


உயிரே சொல்...
எப்போதிலிருந்து
நிச்சயமானது-
நம் உறவுக்கான மரணம்?


காலை வேளையில்
கண்டும் காணாத 
ஓரப்பார்வைகளின்
கரிசனங்கள் இல்லை!


மாலை வேளையில்
காற்று வாங்கும்
மாமரத்தடிகளில்
தரிசனங்கள் இல்லை!


எப்போதும் நீ விரும்பும்
குட்டித்தூக்கத்தை
இப்போது-
தொலைத்து விட்டாயாமே?


உனது நாட்குறிப்பேட்டில்
ஆசையாய் எழுதி வைத்த
என் பெயரை-
கலைத்து விட்டாயாமே?

எந்த கேள்வி யார் கேட்டாலும்
ஓரிரு வார்த்தைகளில் 
பதில் சொல்ல-
கற்றுக்கொண்டாயாமே ?


எந்த உதவி யார் செய்தாலும்
காரணம் யாரென
உறுதி படுத்தி-
பெற்றுக்கொண்டாயாமே?


குளிப்பதாய் சொல்லி
குளியலறைக்கு சென்று
குளிக்காமல்-
திரும்புகிறாயாமே?

தலையணைக்குள்
முகம் புதைக்கும்
தனிமைகளை-
விரும்புகிறாயாமே?


வேதனையோடு வினவுகிறேன்
ஏன் இப்போதெல்லாம்
சந்தோஷ முல்லைகள்
உன் வதன தோட்டத்தில் பூப்பதில்லை?


எனக்குள்ளே முனவுகிறேன்
ஏன் இப்போதெல்லாம்
உன் காதுகளில்
என் பேச்சு மட்டும் கேட்பதில்லை?


அடிக்கடி
அழுகை உனக்கு
சொந்தமாகிறதாமே?


என்னை பார்த்தால்
உந்தன் புத்தி
மந்தமாகிறதாமே?
 
என்னைப்பற்றிய
பேச்சுக்களை
வெகு ஜாக்கிரதையாக
தவிர்த்து விடுகிறாயாமே?


அப்படியும் பேசினால்
வேண்டுமென்றே
வேறொரு கதையை
அவிழ்த்து விடுகிறாயாமே?


என்னோடு சேர்த்து
எதை எதையோ
மறந்து விட்டதாக
பொய் மாளிகை கட்டிக்கொள்ள
யார் உனக்கு
அஸ்த்திவாரம் போட்டார்கள்?


உனக்கும் எனக்கும்
ஒருபோதும்
ஒத்துவராதென
பசுமரத்தாணி போல்
யார் உனக்கு
பதியவைக்கப் பார்த்தார்கள்?


புல்லாங்குழலை
முறித்தென்ன?
அதன் கீதம்
செவிக்கு
சொந்தமான பின்னே?


ஜாதிமுல்லையை
கசக்கியென்ன?
அதன் வாசம்
மூக்கின்
மூச்சான பின்னே?


என் செல்லமே
பிரிதல் எனபது
உனக்கும் எனக்குமான
ஒரு புரிதல்
என்றே எண்ணுகிறேன்!


எப்போதும் நீ
ரசித்து பார்க்கும்
அழகிய நட்சத்திரமாய்
எட்டி நின்றே
நான் மின்னுகிறேன்!


என் நெஞ்சை காப்பாற்றும்
நெருப்பாக
உன்னை ஊதி ஊதி
எப்போதும் வைத்திருக்கிறேன்!


உன் காலை காப்பாற்றும்
செருப்பாக
என்னை மாற்றிதர
இப்போதும் காத்திருக்கிறேன்!


நீ
என்னுள்
எழுகின்ற வெப்பம்!


என்
அன்புப்பசியை
அடக்கிய அப்பம்!


நிஜமான
நினைவுகள்
மரிப்பதில்லை!


நிஜமான
கண்ணீர்
கரிப்பதில்லை!


உன்னைப்பற்றிய
நினைவுகள்
கொடுக்கும் சுகங்கள்தான்
இந்த மண்ணின்
சொர்கங்களோ?


உன்னைப்பற்றிய
கனவுகள்
கொடுக்கும் சுகங்கள்தான்
அந்த விண்ணின்
சொர்கங்களோ?


நெஞ்சு கூட்டுக்குள்
நிரந்தரமாய்
நீ இருக்க
பிரிவுகளுக்காய்
அழுவதில் அர்த்தம் இல்லை!


ஒருவரை ஒருவர்
புரிந்து கொண்ட
பிறகும் கூட
பிரிவுகளுக்காய்
புலம்புவதில் நியாயம் இல்லை!


பிரிவு என்பது
சுதந்திரம்
அதில் பிரியம் என்றுமே
நிரந்தரம் ஆனால்!


பிரிவு என்பது
ஒரு வரம்
அது பிரியத்தின்
அடையாளம் ஆனால்!


நீ தள்ளி
இருக்கையில்தான்
தவிக்க முடிகிறது!


நீ தூர
இருக்கையில்தான்
துடிக்க முடிகிறது!


எனவேதான்
உன் நினைவுகளில்
நனையவே
தனிமை தேடுகிறேன்!


நீயே வந்து
தட்டும் போதும்
இதயத்தின்
கதவை மூடுகிறேன்!


நீ
தொலைவில் இருக்கையில்
வார்த்தைகள் முட்டுகிறது!


உன்னை
அருகில் பார்க்கையில்
உதடுகள் ஒட்டுகிறது!

நம்மை நமக்கே
பிரிவுதான்
புரிய வைக்கிறது!


உயிரின் உணர்வை
பிரிவுதான்
தெரிய வைக்கிறது!


என்றிலிருந்து என்று
ஞாபகம் இல்லை!
உனக்கு பிடித்ததெல்லாம்
எனக்கு பிடிக்கிறது!


என்றிலிருந்து என்று
சொல்ல முடியாது!
உனக்கு பிடிக்காததெல்லாம்
விட்டுவிட தோன்றுகிறது!


உன் தனிமைகளில்
என்ன யோசிப்பாயென
நான் யோசிக்கிறேன்!


உன் வெறுமைகளில்
எதனை நிரப்புவதென
கடவுளை யாசிக்கிறேன்!


உன்னை பிரிந்து
நான் வாழ்கிறேனா?
யார் அப்படி
சொல்லிப்போனது?


உன்னை மறந்து
நான் இருக்கிறேனா?
அதனை நீ
நம்புகிறாயா?


எந்த பாடலையும்
தாளத்துடன்-
இசைத்து கேட்கிறேன்!


சுற்றி நடக்கும்
வேடிக்கையை-
ரசித்து பார்க்கிறேன்!


வேளை தவறாமல்
வயிற்றை-
பசித்து  நிரப்புகிறேன்!


காற்றில் வரும்
நறு மணத்தை
விரும்பி நுகர்கிறேன்!


கண்ணாடி பார்த்து
தலை வாரி
அலங்கரிக்கிறேன்!


எல்லோரும் போல்
சிரித்து
பேசிக்கொண்டிருக்கிறேன்!


நீ இல்லாமலேயே
உன் நினைவுகள்
என்னை நிறைத்திருப்பதால்!


நீ
என்ற சொல்லின்
அர்த்தம்
எனக்கு தெரியும்!


நான்
என்ற சொல்லின்
அர்த்தம்
உனக்கு தெரியும்!


நாம்
என்ற சொல்லின்
அர்த்தம்
நமக்கே தெரியாது!


உன்னை என்றுமே
எனக்குள்
இருத்தி வைக்க
ஆசைபடுகிறேன்!


சுமக்க முடியாத
உன் ஞாபகங்களை
நான் இன்னும்
சேகரிக்கிறேன்!


பிரிவு என்பதை
சொல்லத்தான் வேண்டும்
அதற்கான வார்த்தைக்கு
நான் எங்கு போவேன்?


பிரபஞ்சத்தில்
நீயும் நானும் நிறைந்திருக்க
காலத்தின் இச்சிறு பிரிவு
நம்மை என்ன செய்யும்?


உடல்
எப்போதும் அழிந்து விடும்!
அது பிரிவை
நமக்கு தருகிறது!


மனம்
நினைவுகளின் பிறப்பிடம்!
அது உன்னிடம்
இருந்தே தொடங்குகிறது!


என்னில்
சில வரிகளை மட்டுமே
நீ படித்திருக்கிறாய்!
நான் இன்னமும்
முழுமை அடையாத
ஒரு புத்தகம்!


என்னிடமிருந்து
விலகிப்போக
நீ எத்தனிக்கிறாய்!
அது உன்னை
எனக்குள் சிறைவைக்கும்
தீவிர முயற்சி!


ஏன்
என் அன்புக்கு
பெயர் வைக்க சொன்னாய்?


தென்றல் மொழி
பூவுக்கு
புரியாதா?


ஆதவன் தீண்டல்
தாமரைக்கு
தெரியாதா?


வாசிக்கும் கரங்கள்
ராகம்
அறியாதா?


நேசிக்கும் உள்ளத்துக்கு
அன்பு
தெரியாதா?


புரிந்தும் புரியாமல்
நடிக்கின்ற
ஊடலா?


புல்லின்
அனுமதி கேட்டா
பனித்துளி
படுத்து உறங்குகிறது?


உன்னிடம்
அனுமதி கேட்டா
மனம்
மயங்கி கிறங்குகிறது?


கடலோடு
அலை
சங்கமிப்பது
யாரை கேட்டு?


மனதோடு
மனம்
சங்கமிப்பது
யாரை கேட்டு?


உன்னால் என்னை
புரிந்து கொள்ள
முடியும் என்றால்
எனக்காக
விட்டு கொடு!


என்னால்தான்
உன் இரவுகள்
விடியவில்லை என்றால்
என்னையே
விட்டு விடு!


வாழ்வின்
வசந்தங்களோடு
வாழ்க்கை முடிவதில்லை!


வசந்தமில்லா
வாழ்க்கையை
வாழ்வதில் பயனில்லை!


காற்றோடு
வாசம் வீசும்
பூக்கள் கூட
வாடித்தான்
ஆகவேண்டும்!


விடியலோடு
உல்லாசமாயிருக்கும்
உலகும் கூட
அஸ்தமித்துதான்
ஆகவேண்டும்!


உனக்கும்
எனக்குமான
உறவுகளுக்கு
பெயரிட விரும்பவில்லை!


பெயரிடப்பட்ட
உறவுகள்
சீக்கிரத்தில்
செத்து போய்விடும்!


அன்பு என்பது
உறவுகள் என்னும்
சிறைகளுக்குள்
ஒருபோதும்
சிக்காதது!


அன்பு என்பது
ஒருவரின் வேதனை
விக்கல்களுக்கு
நீர் கேட்டு
விக்காதது!


உன்னை
எப்படி
நான்
அழைப்பது?


நீ
ஒரு
சுகமான
அவஸ்த்தை!


நீ
ஒரு
அவஸ்த்தையான
சுகம்!


உன்னுடன்
பேசிய வார்த்தைகள்
தொலைந்தா
போய்விடும்?


உன்னுடன்
பழகிய நினைவுகள்
மறந்தா
போய்விடும்?


உன்னை விடவும்
உன்
அன்புகள் சுமந்த
இனிமையான தருணங்களை
நினைத்து கொண்டிருப்பது
எனக்கு சுகமாயிருக்கிறது!


என்
பேச்சுகள்
உன்னை
கவர்ந்திருக்கலாம்!


என்
நிறைகள்
உன்னை
நிறைத்திருக்கலாம்!


என்னைப்பற்றிய
உன்
கற்பனை கலந்த
இனிப்பான கனவுகளை
கலைத்து விடுவதில்
எனக்கும் விருப்பமில்லை!


யோசித்துப்பார்!
எத்தனை முறை
என் இதயத்தை
குத்தி கிழித்திருப்பாய்!


சிந்தித்துப்பார்!
எத்தனை முறை
கண்ணீர் சிந்தி
அழ வைத்திருப்பாய்!


என் குறைகள்
என்னவென்று
நீ
அறியாமலேயே!


என்
தேவைகளுக்கு
நீ
சேவை செய்வதா?


நிச்சயமாய்
நீ
நேசிக்கப்பட
வேண்டும்!


கண்டிப்பாய்
நீ
பூசிக்கப்பட
வேண்டும்!


நீ
ஆட்டுவிக்க
பிறந்திருக்கிறாய்!


நீ
போற்றப்பட
பிறந்திருக்கிறாய்!


பூவுலகின்
சொர்கங்கள்
உனக்கு சொந்தம்!


ஏணிவைத்தாலும்
எட்டாது
உன்னோடு பந்தம்!


எனக்காக என்ன
செய்வாய்?
எப்போதும் என்னிடத்தில்
கிண்டலுடன் கேலி!


உன் தோட்டத்தில்
பூக்கும்
சந்தோஷ பூக்களுக்கு
நானும் ஒரு வேலி!


நம் சிநேகம்
பருவத்தில்
ஏற்படுகின்ற
இனக்கவர்ச்சிஎன்று
நினைத்து விடாதே!


எதிரெதிர்
பாலினத்திற்கு
ஏற்படுகின்ற
ஈர்ப்புஎன்று
எண்ணி விடாதே!


அது
என்னுடைய
உயிரின்
வெளிப்பாடு!


அது
என்னுடைய
அன்பின்
அவதாரம்!


முதிர்ச்சி அன்னையால்
தாலாட்டப்படாத
முறிந்து போகும்
சிறகுகளோடு
நான்!


என் இதயம்
கசிந்துருகி
வழிந்து ஓடும்
கண்ணீர் துளிகளில்
நீ!


காயங்களுக்குதான்
மருந்தின் அருமை
தெரியும்!


பசித்தவனுக்குதான்
விருந்தின் அருமை
தெரியும்!


நான்
இன்பங்களுக்காக
மட்டுமல்ல
துன்பங்களுக்காகவும்
ஏங்குகிறேன்!


நான்
விரும்பப்பட
மட்டுமல்ல
வெறுக்கப்படவும்
ஏங்குகிறேன்!


உன்
பிரிவுகள் கூட
எனக்கு
பிரியமனதுதான்!


என்
சோகங்கள் கூட
எனக்கு
சுகமானதுதான்!


உன்னை எனதாக்கி
என்னில்
உன் குறைகளுக்காய்
நான் ஏமாந்து போனால்
அதை என்னால்
தாங்கிக்கொள்ள
இயலும்!


என்னை உனதாக்கி
உன்னில்
என் குறைகளுக்காய்
நீ ஏமாந்து போனால்
அதை என்னால்
தாங்கிக்கொள்ள
இயலாது!


ஒவ்வொரு
கணத்திலும்
உன்னை
நினைத்து
கொண்டிருப்பதில்
பேரானந்தப்படுகிறேன்!


என்னில்
எப்போதுமே
நீ
நிறைந்திருக்க
வேண்டுமென
பேராசைப்படுகிறேன்!


உன்னை
மணக்க
முடியாததால்
நான்
உன்னை விடவும்
அதிகமாக
அல்லல்படுவேன்
என்பது உண்மை!


உன்னை
மறக்க
முடியாததால்
நான்
உன்னை விடவும்
அதிகமாக
சந்தோஷப்படுவேன்
என்பது சத்தியம்!


காதல் என்பது
வெறும்
ஊடல் மட்டும்
இல்லை!


காதல் என்பது
வெறும்
கூடல் மட்டும்
இல்லை!


இரு மனங்களின்
சேர்க்கையை
தடுத்துவிடும்
தைரியம்-எந்த
சக்திக்கும் இல்லை!


இரு மனைகளின்
சேர்க்கைக்கு
திருமணந்தான்
வேண்டும்-என்ற
அவசியமும் இல்லை!


நேசிப்பு என்பது
கட்டுப்பாடுகள்
அற்ற சுதந்திரத்தை
தருவது!


நேசிப்பு என்பது
உள்ளத்தின்
அடி ஆழத்திலிருந்து
எழுவது!


அது
இயற்கையானது!


அது
நிஜமானது!


அது
சத்தியமானது!


அது
உண்மையானது!


நாம்
என்பது
நிரந்தரமல்ல!
ஆனால்
நம்
நினைவுகள்
நிரந்தரமற்று
போவதுமல்ல!


உனக்கென்று
எப்போதும்
ஒரு
தனித்தன்மை
உண்டு!


என்னில்
பாதிப்பை
ஏற்படுத்தியது
நீ!


என்னில்
பதிவை
ஏற்படுத்தியது
நீ!


நீ
என் மீது
கோபம் கொள்வதில்
எனக்கு
கோபமில்லை!
ஆனால்
அதனால் நீ
காயப்பட்டு விடாதே!

நீ என் மீது
வெறுப்பை சிந்துவதில்
எனக்கு
விருப்பமில்லை!
ஏனெனில்
என்னில் நீ
எப்போதும் இருப்பதால்!


என்னால்
அன்புகள்
அசிங்கப்படுவதை
ஏற்றுக்கொள்ள
முடியாது!


என்னால்
உறவுகள்
கொச்சைப்படுவதை
தாங்கிக்கொள்ள
முடியாது!


உன்னை
பாதுகாக்கும்
பக்குவம்
எனக்கு
போதாதென்று
தோன்றுகிறது!


உன்
அதீத
அன்பே
எனக்கு
கவலையை
அளிக்கிறது!


உன்னுடைய
இடத்தை
நிறைவு செய்ய
யாராலும்
இயலாது!


உன்னுடைய
இடத்தை
உனக்கு வழங்கவே
என்னால்
இயலாது!


நாம்
மிக மிக
விரும்புகின்ற
ஒரு நபர்
நம்முடன்
இருப்பதைவிட
நலமாய் இருப்பதே
உண்மையான
அன்பு!


நாம்
மிக மிக
விரும்புகின்ற
ஒரு பொருள்
ஆண்டு
அனுபவிப்பதை விட
அடையாதிருப்பதே
சுகத்திலும்
சுகம்!


என்னைப்பற்றி
நீ
என்னவென்று
நினைக்கிறாயோ
எனக்கு
தெரியவில்லை!


என் நேசிப்பை
நீ
எந்தளவு
உணர்ந்தாயோ
எனக்கு
தெரியவில்லை!


உனக்குப்பிடித்த
இந்த உலகத்தில்
நானும் வாழ்கின்ற
சந்தோஷம்
மகிழ்ச்சியாக
இருக்கிறது!


உன்னை
நேசித்தது
நிஜம்!


உன்னை
நேசிப்பது
நிஜம்!


உன்னை
நேசிக்கப்போவதும்
நிஜம்!


அதில்
யாருடைய
குறுக்கீடும்
தடை செய்வதாய்
நான்
கருதவில்லை!


உருவம்
அருகில்
இருக்கும்போது
மட்டும் தோன்றுகின்ற
அன்பு
நிஜமானதல்ல!


நான்
சந்தோஷப்படுத்துகிற
நபர்
இல்லைதான்!
ஆனாலும்
சங்கடங்கள்
தராத நபர்!
என்னுள்ளே
சந்தோஷிக்கும்
நபர்!


இந்த
உலகம்
மிகப் பெரியது!


உண்மையான
அன்புகள்
காற்றில் கலந்தவை!


உண்மையான
நேசங்கள்
இயற்கையில் இணைந்தவை!


மீண்டும்மீண்டும்
பூத்து
சிரித்துகொண்டேதானிருக்கும்!


மனிதர்கள்
மரணிப்பார்கள்!
மரணங்கள்
மரணிப்பதில்லை!


அன்பர்கள்
அழிவார்கள்!
அன்புகள்
அழிவதில்லை!


கடைசியாக
ஒரே ஒரு
வேண்டுகோள்
மட்டும்!


என்னைப்பற்றிய
உன் நினைவுகளை
யாரிடமும்
சொல்லி விடாதே!


உயர்வாக இருந்தால்
உடைந்து போவேன்!
தாழ்வாக இருந்தால்
தாங்க மாட்டேன்!


நலமாக இரு!
முடிந்தால்
என் அன்பையும்
நினைவில் இருத்தி வை!


நமக்குள்
மீண்டும் ஒரு
சந்திப்பு நிகழாது-
என்ற நம்பிக்கையோடு
விடை பெற்றுக்கொள்வோம்!

வியாழன், 19 மே, 2011

தமிழ்த்தாய் வாழ்த்து!

என்னே அழகு
செம்மொழி!
என்னை-
எழுதவைத்தது
அம்மொழி!

தாயார் எனக்கு
தந்த மொழி!
என்னை-
தாலாட்டி வளர்த்த
சந்த மொழி!


எத்திக்கும் எத்திக்கும்
எமது மொழி!
அது-
தித்திக்கும் தித்திக்கும்
அமுது மொழி!


எழுதி பழக
எளிமை மொழி!
தமிழ்-
என்றும் இளமை
புதுமை மொழி!

புதன், 18 மே, 2011

"வ"வரிசைப்பாட்டு



வயலூர் என்றொரு கிராமத்தையே
வாருங்கள் போய் பார்த்து வரலாம்
விழாக்கள் கொண்டாடும் சமயத்திலே
வீர விளையாட்டுக்கள் அங்குண்டு
வுபாத்தியாயரிடம் பயின்றிடவே
வூருக்குள்ளே பள்ளியுண்டு
வெட்டியாய் பொழுதை கழிக்காமல்
வேலை செய்யும் மக்களுண்டு
வைகை ஆறும் அங்குண்டு
வொன்றாய் நன்றாய் வசித்திடவே
வோட்டு வீடுகளும் அங்குண்டு
வௌவால் வந்து பழம் தின்னும் 
செவ்வாழை மரங்களும் அங்குண்டு! 

"ல"வரிசைப்பாட்டு



லட்டு நிறைய வேண்டுமென்று
லாரன்ஸ் பையன் கேட்கின்றான் 
லிப்ஸ்டிக் நிறைய வேண்டுமென்று
லீலா பொண்ணு கேட்கின்றாள் 
லுங்கி நிறைய வேண்டுமென்று
லூக்காஸ் மாமா கேட்கின்றார் 
லெஸ்சி நிறைய வேண்டுமென்று
லேடி ஒருத்தி கேட்கின்றாள் 
லைஃப்பில் ஆளுக்கொரு ஆசைதான்
லொக்லொக் என்று இருமிக்கொண்டு
லோகநாதன் தாத்தா சொல்கின்றார்
லௌகீக வாழ்வை முறை செய்தால்
தொல்லை வாழ்வில் என்றும் இல்லை! 

"ர"வரிசைப்பாட்டு



ரத்தம் குடிக்கின்ற ஓநாயாம்
ராபர்ட்கிளைவ் என்ற ஆங்கிலேயன்
ரிப்பன் வளையல் விற்க வந்தான் 
ரீல் விட்டு ராஜாக்களை பிரித்து வைத்தான் 
ருசி கண்ட பூனை அவன் தந்திரத்தால் 
ரூபம் இன்றி போனது பாரதம் 
ரெடிமேட் பொருட்களை அவன் செய்ய 
ரேகை தேய நாம் உழைத்தோம் 
ரைட் லெப்ட் நம்மையே போடவைத்தான் 
ரொட்டி துண்டுக்கு அலைய வைத்தான் 
ரோபோ போல நடத்தி வைத்தான் 
ரௌலட் சட்டத்தால் அடக்கி வைத்தான் 
பார் தம்பி வரலாற்றை புரட்டி பார்!  

"ய"வரிசைப்பாட்டு



யப்பா யப்பா ஐயப்பா
யானை வருது பாரப்பா
யிறங்கி கீழே வருதப்பா
யீரல் குலையும் நடுங்குதப்பா
யுத்தம் மனசுக்குள் நடக்குதப்பா
யூர்யா கடை முன் நிக்குதப்பா
யெத்தனை அழகாய் தும்பிக்கையை
யேந்தி தட்சணை கேக்குதப்பா
யை யை என்று நடுங்கும் உன்னை
யொன்றும் செய்யாத யானையப்பா
யோகம் வருமே நம்பப்பா
யௌவனம் மிக்க யானையிடம்
அய்யோ என்று பயப்படாதப்பா!

"ம"வரிசைப்பாட்டு



மடமட என்று கிளம்புவாரு
மாடி வீட்டு காவலரு
மிடுக்காய் சீருடை அணிவாரு
மீசையை முறுக்கி நடப்பாரு
முட்டிக்கு முட்டி தட்டுவாரு
மூக்கு மேலேயே குத்துவாரு
மெல்லமெல்ல பதுங்கி போய்
மேலே பாய்ந்து பிடிப்பாரு
மைதிலி வீட்டில் ஒரு தடவை
மொட்டை தலையன் திருடி சென்ற
மோதிரம் செயினை மீட்டாரு
மௌனமாய் திருட்டுகள் செய்தவனை
கம்பிகள் எண்ண வைத்தாரு!

"ப"வரிசைப்பாட்டு



பட பட பட்டாம் பூச்சிகள்
பாருங்கள் எந்தன் கண்ணுக்குள்
பித்தம் தலையில் ஏறியதோ
பீப்பீ சத்தம் காதுக்குள்
புத்தம் புதிய குண்டு மல்லி
பூக்கும் வாசனை மூக்குக்குள்
பெரிதாய் கற்பனை செய்தபடி
பேசிக் கொள்கிறேன் வாய்க்குள்
பைத்தியம் பிடித்தது உடம்புக்குள்
பொத்தி வைத்த கார்முகிலின்
போர்வைக்குள் இருந்து தலை காட்டும்
பௌர்ணமி நிலவை நீ ரசித்தால்
அப்பப்பா உனக்கும் இது நடக்கும்!

"த"வரிசைப்பாட்டு



தடதட என்று ஓடி வந்தார்
தாடி வைத்த காதர் பாய்
திகு திகு என்று எரிகிறதாம்
தீப்பிடித்து ஒரு வீடு
துள்ளி அனைவரும் எழுந்தார்கள்
தூக்கம் அனைவரும் தொலைத்தார்கள்
தெருவே அங்கே கூடியது
தேவையான உதவிகள் செய்தது
தைரியம் சிறிதும் குறையாமல்
தொண்ணூறு நிமிடம் போராடினர்
தோகைப்பாடி ஜனங்களெல்லாம்
தௌலத் பேகம் வீட்டாரை
பத்திரமாக காப்பாற்றினர்!

"க"வரிசைப்பாட்டு



கருப்பு மூக்கு காக்கை ஒன்று
காட்டு மரத்தில் கூடு செய்தது
கிளையின் கூட்டுக்குள் காக்கைகுஞ்சு
கீச் மூச் என்று அழுதது
குஞ்சுக்கு இரை தேடி தாய் காக்கை
கூட்டை விட்டு பறந்து சென்றது
கெட்டிக்கார சிறுவன் கோபு பையன்
கேழ்வரகு வடைகள் வைத்திருந்தான்
கையில் நிறைய வைத்திருந்தும் 
கொத்தியே காகம் பிடுங்கவில்லை 
கோபு மகிழ்ந்து வடை கொடுத்தான் 
கௌவியே காகம் பறந்து சென்றது 
காக்கை குஞ்சுக்கு ஊட்டி விட்டது!  


"ந"வரிசைப்பாட்டு



நமது இந்திய வரைபடத்தில்
நான்கு எல்லைகளும் குறிப்பாயா
நிலத்துக்கு எந்த வண்ணம் சொல்
நீருக்கு எந்த வண்ணம் சொல்
நுனி முதல் அடி வரை பூகோளத்தை
நூலிழை விடாமல் அறிந்து கொள்
நெதர்லாந்து எங்குள்ளது
நேபாளம் எங்குள்ளது
நைஜீரியா எங்குள்ளது
நொடியில் சொல்ல கற்று கொள்
நோக்கி நோக்கி பழகி கொள்
நௌவாக்சோட் ஒரு தலைநகரம்
எந்த நாட்டுக்கென்று  சட்டென்று சொல்! 

"ச"வரிசைப்பாட்டு



சட சட சட சட மழை வருது 
சாரல் அடிக்கிற மழை வருது 
சின்ன  சின்ன பிள்ளைகளே
சீக்கிரம் வீட்டுக்கு போய் விடுங்கள்
சுட்டு தருவார் அம்மாதான்
சூடாய் போண்டா பஜ்ஜி வடை
செடியும் கொடியும் ஆடிடுமே
சேற்று தவளை பாடிடுமே
சைக்கிளில் வருவார் அப்பாதான்
சொட்ட சொட்ட நனைந்தபடி
சோலைகள் எங்கும் பூ பூக்கும்
சௌந்தர்யம் அதிலே தவழ்ந்து வரும்
பச்சை வயல்கள் மகிழ்ச்சி தரும்!

"அ"வரிசைப்பாட்டு



அலைஅலை அலைஅலை அலைகடலே
ஆமை வசிக்கின்ற அலைகடலே 
இரவும் பகலும் பாராமல் 
ஈகை செய்கின்ற அலைகடலே
உப்பளம் தனிலே உப்பானாய்
ஊருக்கெல்லாம் மழை தந்தாய்
எத்தனை எத்தனை உயிரினங்கள்
ஏராளமான செல்வவளங்கள்
ஐயோ எப்படி சுமக்கின்றாய்
ஒரு தெய்வத்தாயும் நீதானே
ஓலமிட்டு அழுகின்ற உள்மனதை
ஔடதம் தந்து மகிழ்விக்கும் 
அஃது உனது குளிர் காற்று!

"ட"வரிசைப்பாட்டு



டக் டக் டக் டக் பொண்ணு வரா
டான்ஸ் ஆடுற பொண்ணு வரா
டிக் டிக் டிக் டிக் மணி ஆச்சு
டீயை சீக்கிரம் கொண்டாங்க
டும் டும் டும் டும் கல்யாணம்
டூட்டிக்கு போற மாப்பிளைக்கு
டெலிவிஷன் ஒண்ணு தந்திடுங்க
டேப்ரிகாடரும் தந்திடுங்க
டையை கட்டுற மாப்பிளைக்கு 
டொக் டொக் குதிரை வண்டியிலே
டோக்கியோ போலீஸ் வந்தாரு 
டௌரி கேட்ட மாப்பிளையை 
பட்டணத்து ஜெயிலில் அடைச்சாரு!